Monday, October 28, 2019

நவகிரஹங்களின் முழு விபரம் (கேது )

9.கேது 

இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு                        : வட மேற்கு
அதிதேவதை          : சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை  : பிரமன்
தலம்                         : காளத்தி
நிறம்                          : செம்மை
வாகனம்                   : கழுகு
தானியம்         : கொள்ளு
மலர்                 : செவ்வல்லி
வஸ்திரம்        : பல நிற ஆடை
ரத்தினம்           : வைடூரியம்
அன்னம்           : கொள்ளுப்பொடி சாதம்.
ஜாதகரின் தாய் வழி தாத்தா பாட்டியை குறிக்கும்.
நட்சத்திரம்   : அஸ்வினி, மகம், மூலம்.
உலோகம்           : தாமிரம் மற்றும் கருங்கல்
தேவதை               :  இந்திரன்
குணம்                    : தாமஸம்
சுபாவம்                  : குரூரர்
சுவை                      : புளிப்பு
உடல் அங்கம்     : உள்ளங்கால்
தாது                         : இல்லை (நிழல் கிரகம் என்பதால்)
நோய்                      :  பித்தம்
பஞ்சபூதம்              : நீர்
பார்வை நிலை     :  தான் நின்ற ராசியில் இருந்து 7-ம்  இடத்தை 
முழுமையாகவும், 3, 10 ஆகிய  இடங்களை கால் பங்கும், 5, 9  ஆகிய இடங்களை அரை  பங்கும்,  4, 8 ஆகிய இடங்களை முக்கால்  பங்கும் பார்ப்பார்.
பாலினம்                  : அலி
உபகிரகம்                 : தூமகேது
ஆட்சி ராசி                :  இல்லை
உச்ச ராசி                   : விருச்சிகம்
மூலத்திரிகோண ராசி    :  இல்லை
நட்பு ராசி                              : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
சமமான ராசி                      : இல்லை
பகை ராசி                             :  மேஷம், கடகம், சிம்மம்
நீச்ச ராசி                               : ரிஷபம்
திசை ஆண்டுகள்              :  ஏழு ஆண்டுகள்
ஒரு ராசியில் 
சஞ்சரிக்கும் காலம்          : ஒன்றரை ஆண்டுகள்
நட்பு கிரகங்கள்                   : சுக்ரன், சனி
சமமான கிரகங்கள்           : புதன், குரு
பகையான கிரகங்கள்       : சூரியன், சந்திரன்,  செவ்வாய்
அதிகமான பகையான 
கிரகம்                                     : சந்திரன் செம்பாம்பு,  கதிர்பகை, ஞானன்



பில்லி, சூனியம், மாந்திரீகம், மருத்துவம், ஆன்மிகம், மதப்பிரசாரம், சித்த மருந்துகள், லேகியம் தயாரிப்பு, களிம்புகள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட நல்ல லாபம் பெறலாம்.
ராகு கொடுப்பார்.. கேது கெடுப்பார்’ என்பது ஜோதிட பழமொழி. இருந்தாலும் கேது, ஞானக்காரன் என்பதால் அவரது பங்குக்கு சில நன்மைகளைச் செய்வதில் இருந்து தவறுவதில்லை.


கேது தரும் நன்மைகள் நிரந்தரம் இல்லை என்றாலும், அதனை தக்க வைத்து கொள்ள போதிய புண்ணியபலம் இருக்க வேண்டும். புண்ணிய பலத்தை தரக்கூடிய குரு, ஒருவரது ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். குரு நன்றாக இருந்தால், கேது தரும் நன்மைகளால் தலைமுறைகள் மேன்மை அடையக்கூடும்.

ஒருவரது ஜாதகத்தில் கேது யோகம் தரக்கூடிய இடத்தில் இருந்தால், பல நன்மைகள் உண்டாகும். மனிதனாகப் பிறந்த ஒருவருக்கு ஏழாவது ஞானத்தை தரக்கூடிய அளவுக்கு கேதுவிற்கு சக்தி உண்டு. உலகில் யாருக்கும் புலப்படாத பிரபஞ்ச ரகசியங்கள் புலப்படுவதற்கு கேதுவே காரணம். ஒருவர் ஈடுபட்டுள்ள துறைகளில் முதன்மை ஞானத்தை பெறக்கூடிய சக்தியை தருபவர் கேதுவே. உடலை பார்த்தவுடன் நோய்களை பற்றி கூறும் வித்தக கலையும், முகத்தை பார்த்த உடனே எதிர்கால கணிப்புகள் கூறும் கலையையும் தருபவர் கேது பகவான் தான்.

ஏழு லோகங்கள் பற்றி உணரும் சக்தியை கேது தான் தரு கிறார். மரம், செடி, கொடிகளுடன் பேசும் ஆற்றலை பெறுவதும், ஜீவராசிகளிடம் பேசும் ஆற்றலை தருவதும், மூலிகை செடிகளுடன் பேசும் சக்தியை தருவதும் கேது தான். மகாமுனி, மகாதபசி ஆகியோருக்கு மகாதவம் புரியும் சக்தியை தருவதும் இவரே. மந்திர வித்தைகள் கற்பதும், சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் பலிதமாவதற்கும் கேதுதான் காரணம். ஞான வைராக்கியத்தை தருவது, அதிர்ஷ்டகரமான.. வளமான வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ்வதை உணர்த்துவது, விரும்பியபடி வாழ்க்கையோடு சகல சுகத்தை தருபவர் கேதுவே. புதினங்கள் படைப்பதும், வேதாந்த ரகசியங்கள் ஆராய்ச்சி செய்யும் ஞானத்தை கொடுப்பவரும் கேது தான்.

கேதுவால் வரக்கூடிய நோய்கள்

நமது உடலில் தாங்கவே முடியாத வலிகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர் கேது. உடலில் கெட்ட வியர்வை, அதனால் உடல் துர்நாற்றம் வருவதும் கேதுவால் தான். எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு கேதுவின் ஆதிக்கமே காரணம். மூச்சுத் திணறல், மூச்சு விட முடியாமல் அவதிப்படுவது, கெட்டுப் போன.. விஷத்தன்மை கொண்ட உணவுகளால் ஏற்படும் நோய்கள், காற்றில் பரவக்கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கும் கேது தான் காரணம் ஆவார்.
காடுகளில் வழி தெரியாமல் சுற்றித் திரிவது, வன விலங்குகளின் தாக்குதலால் உண்டாகும் உடல் சிதைவு, பற்களை தாங்கும் ஈறுகளில் கெட்ட ரத்தம் படிவது, ஈறுகள் தேய்ந்து போய் பற்கள் ஆடிக்கொண்டு இருப்பது, கீழ்தாடைகளில் வெட்டுப்படுவது, தாடை எலும்பு முறிவு ஏற்படுவது, தியானம், யோகா, ஆன்மிக சக்திகளை தவறான முறைகளில் பயன்படுத்துவதற்கும் காரணமானவர்கள் கேதுவே.

மருத்துவமனைகளில் தவறான அறுவை சிகிச்சை ஏற்படுவதற்கும், தவறான மூலிகை மருந்து கொடுத்து அவதிப்படுவதற்கும், விஷ சாராயம், விஷ நீர் போன்ற உயிர் கொல்லி மருந்துகள் மூலம் உடலில் கண், காது, வாய், உயிர் போவதற்கும் காரணமாக இருப்பவர் கேது. சாலைகளில் சித்தபிரமையில் கத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, பல நாள்பட்ட.. அருவறுப்பான ரண காயத்திற்கு, அசைவ உணவுகள் மூலம் கெட்ட கொழுப்புகள் தரக் கூடிய நோய்களுக்கு, சாக்கடை மற்றும் மனித மலக் கழிவு தொட்டி, ரசாயன கழிவு தொட்டி இவற்றில் செய்யும் வேலையால் வரும் நோய்களுக்கு, பலநாட்கள் குளிக்காமல்.. பல் துலக்காமல் தரித்திர நிலையில் இருப்பதற்கு, கோவில் கோபுரம், கோவில் மண்டபம், கோவில் சிலைகள் ஒருவர் மீது விழுந்து அங்கம் சேதம் அடைவதற்கு, போதை வஸ்துவால் அவதிப்படும் நிலை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் மனநிலைக்கு கேது தான் காரணம் ஆவார்.

கேதுவால் வரும் பாதிப்புகள்


கேது பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், உடலில் ஏதாவது வலிகள் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரக் கூடும் அல்லது உடல் எப்போதும் சூடாகவே இருக்கும். சின்ன சின்ன சீழ் பிடிக்கும் கட்டிகள் வரக்கூடும்.

கேது நீச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், கெட்ட எண்ணம்.. கெட்ட பழக்கவழக்கத்தால் நோய்களை தேடிக் கொள்வார்கள். தோல் அரிப்புகள், கட்டிகள் வரக்கூடும். நிலையான புத்தி இல்லாமல் மன சஞ்சலத்தோடு நோய் கொண்டு வாழ்வார்கள்.

கேதுவின் பகை கிரகங்களான சூரியன், சந்திரன் இணைந்து இருந்தால், உடலில் ஏதாவது பிணி இருந்து கொண்டே இருக்கும். வயிற்று வலி, ரத்த குறைபாடு, கண்கள் குறைபாடு இருக்கும். பரம்பரை நோய்கள் நிச்சயம் வரக்கூடும்.

கேது பகை கிரகமான சூரியன், சந்திரன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், மனதில் மரண பயம் அவ்வப்போது வாட்டி எடுக்கும். நல்ல சுத்தமான பேச்சுகள் இல்லாமல், குளறியபடி பேசுவார்கள். மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருப்பார்கள்.

கேது கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12-ல் மறைவு ஸ்தானத்தில் நின்று இருந்தால், கேது மறைவு பெறுவது நன்மையே என்றாலும், நோயின் வீரியத்தை அதிகப் படுத்தும். நற்பலன்கள் தந்தாலும் அவற்றை நிரந்தரமாக தரமாட்டார். ஆசையை காட்டி மோசம் செய்வார். நாள் பட்ட நோய்களை தருவார். ஜாதகர் சாப்பிடும் மருந்துகள் கூட ஒரு கட்டத்தில் பக்க விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

கேது கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, சின்ன சின்ன விபத்துகள் நடந்து, உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். வேனிற் கட்டிகள் வந்து போகும். உடலில் அரிப்பு,  புண்கள் வரக்கூடும். கண்களில் கோளாறு இருக்கும்.

கேது லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு நித்திய கண்டம் போல் இருக்கக்கூடும். விஷ பாம்புகள், விஷ வண்டுகள் மூலம் ஏதாவது தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். புது தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்.

கேது கிரகத்தை பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், உண்ணும் உணவு விஷமாகும். கெட்ட பழக்கத்தால் தானே நோயை தேடிக் கொள்வதும், எந்த நேரமும் ஏதாவது உடல் தொல்லைகளுடன் இருப்பதும், நோய் போக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதில் அக்கறை காட்டாமலும் இருப்பார்.

உலக பாதிப்புகள்

கேது மிக கொடிய கிரகம் என்பதால், அவரது ஆதிக்க காலத்தில் காற்றில் கண்களுக்கு தெரியாத விஷ கிருமிகள் பரவக்கூடும். உலகில் புதிய தொற்று நோய்கள் வரக்கூடும். மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரலாம். கடவுளின் புனித இடங்களில் துஷ்ட சம்பவங்கள் நடக்கக்கூடும். காடுகளில் அபூர்வமான மூலிகைகள் அழியலாம். பூமிக்கு அடியில் இருந்து வரும் விஷ வாயுக்களால் பாதிப்பு, பொது மக்கள் உணவு பஞ்சம் வந்து பசியால் வாடுவது, நாடு விட்டு நாடு பஞ்சம் பிழைக்க செல்வது, போர் அச்சம் காரணமாக பொதுமக்கள் நிம்மதியின்றி வாழ்வது போன்றவை நடந்தேறும்.

கேது காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேதுப் ப்ரசோதயாது......
மூல மந்திரம் :
ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ருர ரூபிணே கேதவே ஐம் ஸெள: ஸ்வாஹா

நவகிரஹ சாந்தி ஸ்லோகம் :
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ.....


கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.


நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது  முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல்  வேண்டும்.


நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக  வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு  பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி,  வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம்  வருபவர்.


கேது பகவான் - 9 சுற்றுகள் சுற்றவேண்டும்.




No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்